கோவையில் நடக்கும் ஈஷா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்பு

கோவை: ஈஷா மகாசிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்கிறார். மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஈஷா மகாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு அவர்கள் கலந்து கொள்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழா, உலகப் புகழ்பெற்ற ஆதியோகி முன்னிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பிரமாண்டமாக நடைபெறும். இந்த விழா கடந்த 28 ஆண்டுகளாக ஈஷாவில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தியானலிங்கத்தில் செய்யப்படும் பஞ்ச பூத கிரியாவுடன் திருவிழா தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து லிங்க பைரவி தேவி மகா யாத்திரை நடைபெறும். பின்னர், குடியரசுத் தலைவரும், சத்குருவும் மேடையில் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.