இருமடங்காக உயர்ந்தது பூக்களின் விலை

உச்சத்துக்கு சென்ற பூக்களின் விலை... நாகர்கோவில் அருகே தோவாளை பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தோவாளை மட்டுமல்லாமல் சுற்றியுள்ள ஊர்கள் மற்றும் நெல்லை, மதுரை, ஊட்டி ஆகிய வெளியூர்களில் இருந்தும் பக்கத்து மாநிலமான பெங்களூருவில் இருந்தும் பூக்கள் தினமும் லாரிகள் மூலம் வருகிறது.

தினமும் காலையில் பூக்களை வாங்க குமரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், கேரளாவில் இருந்தும் பூ வியாபாரிகள் வந்து, பூக்களை வாங்கி செல்வது வழக்கம். இதனால் காலையில் பூ மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.350-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.650 உயர்ந்து ரூ.1,000-க்கும், 600-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.1,000-க்கும் விற்கப்பட்டது.

பூக்கள் விலை உயர்வு குறித்து வியாபாரி கிருஷ்ணகுமார் கூறும்போது, 'நவராத்திரி முதலாம் நாள் என்பதாலும், ஐப்பசி மாதப்பிறப்பு மற்றும் முகூர்த்தம் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. அதே சமயம் எதிர் பார்த்த அளவுக்கு வெளியூர்களில் இருந்து பூக்கள் வரவில்லை. அதனால் தான் இந்த அளவு பூக்கள் விலை உயர்ந்து உள்ளது' என்றார்.