51 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு காணொளி வாயிலாக பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர்

புதுடில்லி: பணி நியமன ஆணைகள் வழங்கினார்... வேலைவாய்ப்பு திருவிழா மூலம் நாடு முழுவதும் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதன் மூலம் உள்துறை, ரயில்வே, தபால், வருவாய், சுகாதாரம், உயர்கல்வி, பள்ளிக் கல்வி உள்ளிட்ட துறைகளில் காலியாக இருந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், படித்த இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தான் கூறிய உறுதி மொழியின்படி வேலைவாய்ப்பு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

பணிகளில் சேருவதற்கு மொழிப் பிரச்சனை வரக் கூடாது என்பதற்காக ஆங்கிலம், இந்தி அல்லாமல் 13 மொழிகளில் பணியாளர் தேர்வாணயம் மூலம் தேர்வுகள் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட வேலைவாய்ப்பு திருவிழா மூலம் இதுவரை 5 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.