இந்தியாவை மற்ற நாடுகள் வணங்க காரணம்... ஆளுநர் தமிழிசை விளக்கம்

கோவை: ஆளுநர் தமிழிசை தகவல்... மெய்ஞானமும், விஞ்ஞானமும் கலந்துள்ளதால் இந்தியாவை மற்ற நாடுகள் வணங்குகின்றன என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

கோவை பேரூர் பகுதியில், பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, ஆன்மீகத்தோடு தமிழை வளர்ப்பதற்காகவே பேரூர் ஆதீனம் நிறுவப்பட்டதாகத் தெரிவித்தார்.

நாம் வணங்கிக் கொண்டிருந்த நிலவை இன்று இந்தியா அடைந்து அனைத்து நாடுகளும் இந்தியாவை வணங்கக்கூடிய ஒரு நிலை இன்று வந்திருப்பதாக பேசிய அவர், இதற்கு விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்துள்ளதே காரணம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆன்மீகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை என்று சிலர் பேசுவதாகத் தெரிவித்தார். ஆனால் தமிழை வளர்த்தது ஆன்மீகம். ஆன்மீகத்தை வளர்த்தது தமிழ் என்பதில் நாம் அனைவரும் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.