விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டம் காணொளி காட்சி மூலம் நாளை தொடக்கம்

மத்திய அரசின் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமை பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக அவை வழங்கப்படவுள்ளது. அக்டோபர் 11-ம் தேதி இந்நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், 6 மாநில விவசாயிகளுக்கு அவர்கள் சொத்து பற்றிய விவரங்களை குறிப்பிடும் அட்டையினை வழங்கும் திட்டத்தினை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். உத்தர பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகம் ஆகிய 6 மாநில விவசாயிகளுக்கு சொத்து அட்டையினை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் அட்டையில் குறிப்பிடப்படும் சொத்துக்களைப் பயன்படுத்தி கடன் பெறுவதற்கு இந்த அட்டை உதவும். இந்த அட்டையை வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் திட்டங்களுக்கு எதிர்க்கட்சியினர் உள்பட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவசாயிகளுக்கு சொத்து அட்டையினை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.