திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் 6 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் விளைவுகளை மதிப்பிடும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளை Learning Outcome அல்லது Competency Based Test என்று அழைக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த கல்வியாண்டில் மாவட்டம் தோறும் 6 முதல் 9 -ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

எனவே அதன் படி வருகிற நவம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி வரை திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இது பற்றிய அனைத்து தகவல்களும் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் சரியான முறையில் நடத்தப்படுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதையடுத்து இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். அது மட்டுமில்லாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் எமிஸ் கணக்கு எண் வழியாக லாகின் செய்து உள்ளே செல்ல வேண்டும். தேர்வு நடைபெறும் நாளிற்கு ஒருநாள் முன்பாக பிற்பகல் 2 மணியிலிருந்து அரசு பள்ளிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.