நிசர்கா புயல் கரையை கடந்தது: மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டது. ‘நிசர்கா’ புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்தது.

இன்று தீவிர புயலாக வலுப்பெற்று தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்த நிசர்கா புயல், இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதாவது மும்பையில் இருந்து 94 கிமீ தொலைவில் உள்ள அலிபாக் அருகே கரைகடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 11 மணிக்கு பிறகு அலிபாக் அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கனமழையும் பெய்தது. இந்நிலையில் மாலை கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

மும்பைக்கு அருகே கரையை கடந்ததால் சேதம் ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. டாப்லர் வானிலை ரேடார்கள் மூலம் தொடர்ந்து மும்பை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.