வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் திறக்கப்பட்டது

தமிழகத்தில் நேற்று முதல் உயிரியியல் பூங்காக்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்கா நேற்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். அதனால், நேற்று பூங்கா திறக்கப்படவில்லை. இன்று (புதன்கிழமை) அரசு அறிவித்தபடி, வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது.

சுமார் 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படுவதால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கையாளப்பட இருக்கிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கப்பட இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் 'தெர்மல் ஸ்கேனர்' கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே பூங்கா வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

முன்புபோல பறவைகள் மற்றும் விலங்குகளை பார்வையாளர்கள் பார்க்கமுடியாது. வலை போடப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து 2 மீட்டர் தொலைவிலேயே சமூக இடைவெளி கடைபிடித்து பறவைகள்-விலங்குகளை பார்த்து ரசிக்க முடியும். மீன்கள், பட்டாம்பூச்சிகள், பாம்புகள் காண தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சுமார் 7 மாதங்கள் பூங்கா மூடப்பட்டிருந்ததால் வருவாய் மீட்பு நடவடிக்கையாக பூங்கா கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ.75-ல் இருந்த பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ.90 ஆகவும், சிறுவர்களுக்கு (5 முதல் 12 வயதுக்குள்) ரூ.35 ஆக இருந்த கட்டணம் ரூ.50 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஹேண்டி கேமரா, வீடியோ கேமரா, பூங்கா சுற்று வாகனம், சிங்கம், மான்கள் உலாவிடம் செல்லும் வாகன கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.

நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்ட காரணத்தால் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தாய்ப்பால் ஊட்டும் அறை ஆகியவற்றை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.