கார் மோதி நடந்து சென்ற பெண்ணும், அவரது வளர்ப்பு நாயும் பலி

கார் மோதிய விபத்தில் பெண் பலி... கனடாவில் நிதானம் இல்லாமல் காரை ஓட்டி வந்த நபரால் பெண் உயிரிழந்ததோடு அவரின் வளர்ப்பு நாயும் இறந்துள்ளது.

Oakvilleல் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள லேக்‌ஷோர் சாலையின் நடைபாதையில் 51 வயதான பெண் தனது வளர்ப்பு நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது நிதானம் இல்லாமல் 58 வயது ஓட்டுனர் ஓட்டி வந்த கார் சாலையில் இருந்து விலகி அப்பெண் மீது வேகமாக மோதியது. இதில் பெண் மற்றும் நாய் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கார் வேகமாக சாலை தடுப்பில் மோதி நொறுங்கியது.

குறித்த ஓட்டுனர் மது போதையால் நிதானம் இல்லாமல் இருந்தாரா அல்லது தூக்கத்தில் இருந்தாரா என்ற விபரம் தெரியவில்லை. இதையடுத்து அந்த ஓட்டுனரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.