என்னை பயங்கரவாதி போல நடத்துகின்றனர்; நடிகை ரியா வேதனை

என்னை பயங்கரவாதிகள் போல் நடத்துகின்றனர்... பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு தான் தான் காரணம் என்பது போல் சித்தரித்து, தன்னை பயங்கரவாதி போல் நடத்துகிறார்கள் என நடிகை ரியா சக்ரபோர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், தன்னால் இதனை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தானும், தனது குடும்பமும் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளோம். தன்னையும், தனது குடும்பத்தினரையும் தாக்க ஒரு கூட்டம் எப்போதும் காத்துக்கொண்டிருப்பதால், மிகுந்த பயத்தோடு வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்ட அவர், தனது வாழ்க்கையில் போதை பொருட்களை எடுத்தது கிடையாது எனவும், தனது ரத்தத்தை எடுத்து சோதனை செய்து கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங்கை தான் சந்திக்கும் முன்னரே, கஞ்சா பழக்கத்திற்கு அவர் ஆளாகி இருந்ததாகவும், அதிலிருந்து அவரை மீட்க தான் போராடியதாகவும் நடிகை ரியா சக்ரபோர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தனது மகனுக்கு, நடிகை ரியா சக்ரபோர்த்தி நீண்ட காலமாக விஷம் கொடுத்து வந்ததாக, சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.