இன்று மாலை முதல் இரவு வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல்

திருவனந்தபுரம்: விமான நிலையத்தின் ஓடுதளம் வழியாக செல்லும் ஆராட்டு ஊர்வலத்திற்கு வசதியாக இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடப்பு ஆண்டு ஐப்பசி திருவிழாவின் ஒருபகுதியாக சுந்தரவிலாசம் அரண்மனைப் பகுதியில் நேற்று பரிவேட்டை நிகழ்வு நடந்தது. தொடர்ந்து திருவிழாவின் மைய நிகழ்வான ஆராட்டு நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.

இதற்காக கிழக்கே கோட்டையில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பத்மநாப சுவாமி, நரசிங்க மூர்த்தி, கிருஷ்ணன் விக்கிரக வாகனங்கள் ஆராட்டு ஊர்வலமாக கிளம்பும்.

இந்நிலையில், விமான நிலையத்தின் ஓடுதளம் வழியாக செல்லும் ஆராட்டு ஊர்வலத்திற்கு வசதியாக இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படுகிறது.