இது சரியில்லாதது... அமைச்சர் உதயநிதி கண்டனம்

சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என தொடர் முழக்கமிட்டனர். இந்த மதரீதியிலான கோஷத்திற்கு அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.

போட்டியின் இடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என தொடர் முழக்கமிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

விளையாட்டு மைதானத்திற்குள் மதரீதியாக முழக்கமிட்டதற்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விடியோவை பகிர்ந்துள்ள அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது: இந்தியா விருந்தோம்பலுக்கும், விளையாட்டு மனப்பான்மைக்கும் புகழ்பெற்ற நாடு. அப்படியான இந்தியாவில் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கு எதிரான நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது.

விளையாட்டு என்பது இரு நாடுகளுக்கு இடையே சகோதரத்துவத்தை வளர்த்து, ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். வெறுப்பை பரப்புவதற்கான கருவியாக விளையாட்டை பயன்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.