கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து வியாழக்கிழமை கலந்துரையாடல்

வியாழக்கிழமை கலந்துரையாடல்... முன்பாடசாலைகள் மற்றும் 1 முதல் 6 வரையான தரங்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடல் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றினை கருத்தில் கொண்டு முடிவு எட்டப்படும் என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் பிற சுகாதார நிபுணர்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது கொரோனா தொற்று குறைந்த ஆபத்தில் உள்ள மாகாணங்களில் ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி முடிவுகளை கல்வி அமைச்சு எடுக்கும் என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.