பொங்கல் விடுமுறையையொட்டி அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

ஜனவரி 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை வருகிறது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது தமிழர்கள் வழக்கம். இதையொட்டி சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது உண்டு. கொரோனா பாதிப்பின் காரணமாக பேருந்து மற்றும் ரயில்களில் பொதுமக்கள் இன்னும் இயல்பாக பயணம் செய்யவில்லை.

முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகள் ரயிலில் இதுவரையில் வழங்கப்படவில்லை. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவை அரசு விரைவு போக்குவரத்து கழகம் தொடங்கி உள்ளது. தற்போது 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யக்கூடிய வசதி உள்ளது.

இதனால் தமிழகத்தில் நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு, சொசுகு பேருந்துகளில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. மையங்கள் அல்லது www.tnstc.in மற்றும் தனியார் இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா பயம் காரணமாக 40 சதவீத மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். எனவே பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும். இதைத்தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பு பேருந்துகளின் அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் கூறினார்.