கன்னியாகுமரியில் இன்று இரவு முதல் ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம்

ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம்... கன்னியாகுமரியில் மேற்கு கடல் (அரபிக்கடல்) பகுதிக்குட்பட்ட குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த கடல் பகுதிகளில் ஜுன் 1-ம் தேதி முதல் ஜுலை 31-ம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடித் தடைக் காலமாக இருந்து வந்தது.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் மீன்பிடித் தடைக்காலத்தில் தளர்வு அளிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை ஏற்று 60 நாள் மீன்பிடித் தடைக்காலத்தை 45 நாட்களாகக் குறைத்ததுடன், ஜுன் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மேற்குக் கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், இன்று (ஜூன் 15) இரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்குகிறது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடித்த விசைப்படகுகள் நேற்று முதல் கரைக்குத் திரும்பத் தொடங்கின. அதேநேரம் கிழக்கு கடல் பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் பிடிக்கும் தொழில் தொடர்ந்து நடைபெறுகிறது.