கனமழை வெள்ளத்தால் ரயில்கள் ரத்து... பயணிகள் அவதி

புதுடெல்லி: கனமழை வெள்ளத்தால் ரயில்கள் ரத்து... இந்தியாவில் கடந்த சிலவாரங்களாக பல்வேறு பகுதிகளில் பெருமழையும் அதனால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில இடங்களில் நிலச்சரிவுகள், சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ரயில் தண்டவாளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் பாதைகளில் சிக்னல் கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. இதற்கான பராமரிப்பு பணிகளை படிப்படியாக ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் நேற்று 103 ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. 35 ரெயில்கள் பகுதிநேர அளவில் ரத்து செய்யப்பட்டன.

குறிப்பாக தர்பங்கா எக்ஸ்பிரஸ், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ், சோலாப்பூர் எக்ஸ்பிரஸ், ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ், நெல்லூர்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-சென்னை, சென்னை-விஜயவாடா எக்ஸ்பிரஸ் ரயில்களில் சில முழுவதுமாகவும், பகுதியாகவும் ரத்துசெய்யப்பட்டன. சில ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.

கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளும் சரிசெய்யப்பட்டன. இதன் காரணமாக இ-டிக்கெட் புக்கிங் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் சரிவர செயல்பட முடியவில்லை. ரயில்வே நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளால் திட்டமிட்டபடி ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியாமலும், முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் ரத்துசெய்ய முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.

விரைவில் அனைத்து குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டு சீரான ரயில்சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.