ரயில்கள் மீண்டும் வழக்கம்போல் இயங்கும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக தெற்கு ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை ரத்து செய்தது. இந்நிலையில் புயல் கரையை கடந்ததையடுத்து பேருந்து, மெட்ரோ ரயில், சேவை நேற்று பிற்பகல் முதல் தொடங்கியது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கான மின்சார ரயில்களும் ஓடத்தொடங்கின. இன்று காலை முதல் சிறப்பு மின்சார ரயில்கள் அட்டவணைப்படி இயக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் அரசு பொது விடுமுறைக்கு பிறகு இன்று அலுவலகங்கள், திறக்கப்பட்டன. இதனால் நான்கு வழித்தடங்களிலும் சிறப்பு மின்சார ரயில்கள் அதிகாலை முதல் ஓடத்தொடங்கின.

இதேபோல சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் இன்று முதல் வழக்கம்போல் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது:- நிவர் புயல் பாதிப்பில் ரயில் பாதைகள், ரயில் நிலையங்களில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சில இடங்களில் ஏற்பட்டுள்ள சிறு சேதங்களையும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களை இன்று முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இணை ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டால் மட்டுமே ஒரு சில ரயில்களை உடனடியாக இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று தெரிவித்தனர்.