போக்குவரத்து அலுவலகங்களில் நடக்கும் ஊழல் குற்றங்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் தான் பொறுப்பு- கே.எஸ்.அழகிரி

போக்குவரத்து அலுவலகங்களில் சிக்கிய பணம், நகை பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். .இது குறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியிடமிருந்து கணக்கில் வராத 117 சவரன் தங்கநகை மற்றும் ரூ.24 லட்சத்து 15 ஆயிரத்து 780-ம், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடம் இருந்து ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 250-ம், இடைத்தரகர் அதுல் பிரசாத்திடம் இருந்து ரூ.7,850-ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் ஒரு சில போக்குவரத்து அலுவலகங்களில் கணக்கில் வராத இவ்வளவு பெரியதொகை சோதனையில் சிக்கியிருக்கிறது. சோதனை செய்யாத மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களில் எத்தனை கோடி ஊழல் நடைபெறுகிறது என்று தெரியவில்லை. இது மாநில அளவில் போக்குவரத்து அமைச்சரின் ஆதரவில்லாமல் மாவட்ட அளவில் போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் நடக்க வாய்ப்பு இல்லை. இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையோடு நிறுத்தாமல், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழக அரசு அவ்வாறு பரிந்துரைக்காவிட்டால், நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ. விசாரணை கோருவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.