டிரக் டயர் வெடித்தது விபத்து: புலம் பெயர் தொழிலாளிகள் 3 பெண்கள் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதம் மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக பெரும் இன்னல்களுக்கு உள்ளவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களே. பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால், தொழிலாளர்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு பல நூறு கி.மீட்டர்கள் நடந்தே செல்கின்றனர். மேலும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டும் வருகின்றனர். இதனால் பல உயிரிழப்புகளும் நேர்ந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகச் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இத்தனை ஏற்பாடுகளுக்கு பின்பும் உயிரிழப்புகள் தொடர் கதையாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி - மிர்சாபூர் தேசிய நெடுஞ்சாலையில், டிரக் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், டெல்லியில் இருந்து கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமத்திற்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். டிரக்கின் டயர் வெடித்ததே விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பலியான மூன்று பேரும் பெண் தொழிலாளர்கள் ஆவர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல் துறை மற்றும் மீட்பு குழுவினர், விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.