அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலின் போதே அமெரிக்க துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படவுள்ளார். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், துணை ஜனாதிபதி மைக் பென்சும் மீண்டும் போட்டியிடவுள்ளனர். இவர்களை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகின்றார்.

மேலும், துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட செனட் சபை எம்.பி. கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றார். அண்மையில் ஜனநாயக கட்சி தேசிய மாநாட்டில் ஜோ பைடனும், கமலா ஹாரிசும் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.

வடக்கு கரோலினாவின் சார்லட் நகரில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக டிரம்பும், மைக் பென்சும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதன்பின், ஐ.நா.வுக் கான அமெரிக்காவின் முன்னாள் தூதரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே மற்றும் ஜனாதிபதி டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப் ஆகிய இருவரும் மாநாட்டில் உரையாற்றினர்.

ஜனாதிபதி டிரம்ப் திடீரென மாநாடு நடந்த மேடையில் பேசியபோது, அமெரிக்க வரலாற்றில் வரும் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமானது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெற்றால் அமெரிக்காவை சீனா ஆளும் நிலை ஏற்படும். நமது நாடு ஒருபோதும் பொதுவுடைமை நாடாகாது. இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.