விஷவாயு தாக்கி இரண்டு பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை மணலி புதுநகரில் பாதாளச் சாக்கடை அடைப்பை சரி செய்ய முயன்ற 2 பேர் விஷவாயு தாக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணலி புதுநகர் 1வது பிளாக் மார்க்கெட் அருகே இறைச்சி கடை வைத்துள்ள வேல்முருகன், தனது கடை முன்புள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மூடி வழியாக சாக்கடை வழிந்தோடியதை சரி செய்ய கூலி தொழிலாளி தர்மராஜை அழைத்து வந்துள்ளார்.

அவர் மூடியை திறந்து உள்ளே இறங்கியபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற உள்ளே இறங்கிய வேல்முருகனும் மயங்கி சரிந்தார்.

தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்கு சேர்த்தனர்.