ஐ.நா. தலைமை அலுவலகமும் வரும் ஜுன் 30ம் தேதி வரை மூடப்பட்டது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம், எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை மூடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள தலைமை அலுவலகம், கடந்த மார்ச் 16ஆம் திகதி மூடப்பட்டது. பின்னர் ஏப்ரல் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இதையடுத்து மே 31ஆம் வரை நீடிக்கப்பட்டது.

தற்போது அமெரிக்காவில் தொற்றுவீதம் குறையாததன் காரணமாக, எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.,பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வைரஸ் தொற்றால், உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடம் வெறுப்பை காட்டும் வகையிலும், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், தகவல்கள் பரப்பப்படுவது கவலை அளிக்கிறது.

பயங்கரவாத மற்றும் நிறவெறி அமைப்புகள், வைரஸால் ஏற்பட்டுள்ள நிலைமையை சாதகமாக பயன்படுத்தி, மக்களிடம் ஒற்றுமை உணர்வை அழிக்க முயற்சிக்கின்றன.

இதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு, மத தலைவர்களுக்கு உள்ளது. மக்களிடம் ஒற்றுமையை அதிகரித்து, வைரஸ் ஒழிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்’ என கூறியுள்ளார்.