பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை

பாதாள உலகக்குழுவின் தலைவர் சுட்டுக் கொலை... பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலககுழுவின் தலைவர் மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித சுட்டுக் கொல்லப்பட்டார்.

மாளிகாவத்தை பகுதியில் பொலிஸ் மற்றும் பாதாளகுழுவினருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு மாகந்துரே மதுஷ் தகவல் வழங்கிய நிலையில், அவரை அந்த பகுதிக்கு அழைத்து சென்ற போது பாதாள குழு உறுப்பினர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது மாகந்துரே மதுஷ் உயிரிழந்ததுடன், இரண்டு காவற்துறை கான்ஸ்டபிள்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது மாக்கந்துரே மதுஷ் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து 220 மில்லியன் ரூபாய் பெறுமதியான 22 கிலோ கிராம் ஹெரோயின், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் பாதாள உலக குழு உறுப்பினர்கள் பயன்படுத்திய உந்துருளி போன்றவையும் கைப்பற்றப்பட்டன.

பாதாள உலககுழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாக்கந்துரே மதுஷ், கடந்த ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டார். அங்கு இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் வைத்து அவரும், அவருடன் மேலும் 25 பேர் வரையிலும் கைது செய்யப்பட்டு, ஒவ்வொருவராக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.