சைப்ரஸ் மற்றும் ஆஸ்திரியா குடியரசுக்கு பயணம் ஆகிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: சைப்ரஸ் மற்றும் ஆஸ்திரியா குடியரசுக்கு பயணம்... மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சைப்ரஸ் மற்றும் ஆஸ்திரியா குடியரசுக்கு இன்று (29ம் தேதி) முதல் ஜனவரி 3ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி சைப்ரஸ் குடியரசிற்கு செல்லும் அமைச்சர் ஜெய்சங்கர், வரும் 31ம் தேதி வரை அந்நாட்டில் தங்குகிறார். இந்த ஆண்டு இந்தியா மற்றும் சைப்ரஸ் இடையே தூதரக உறவுகளுக்கு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்த விஜயத்தின் போது அவர் சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் அயோன்னிஸ் கசவுலைட்சை சந்திக்கிறார். நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சமூகத்தினரிடம் உரையாற்றும் அவர், இந்திய வம்சாவளி மக்களுடனும் தொடர்பு கொள்கிறார்.

இதன் பின்னர், அவர் ஆஸ்திரியாவில் அந்நாட்டின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அலெக்சாண்டர் ஷால்லென்பர்க்கை சந்தித்துப் பேசுகிறார்.