வேளாண்மைப் பல்கலை. இறுதியாண்டு மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் தேர்வு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. இதையடுத்து முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கு இம்மாதம் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்தது.

இதன்படி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் தேர்வை தொடங்கி நடத்தி வருகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகளும், 24 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் வேளாண்மைச் சார்ந்த பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் உத்தரவின்படி, பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் கல்விக்குழுவின் வழிகாட்டுதல் படி, மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கணினி, மடிக்கணினி மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றின் உதவியோடு தேர்வு எழுதுவதற்கு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

அதில் எவ்வாறு பங்கேற்பது, தேர்வெழுதுவது, கண்காணிப்பது என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2-ந் தேதி முதல் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 2,365 மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே எழுதுகிறார்கள். இதில், 171 ஆசிரியர்களின் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்வு வருகிற 14-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் மதிப்பீட்டு பணிகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் விரைவாக அறிவிக்கப்படும்.