பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளம்

உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு வசித்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கராச்சி நகரில் இதுவரை இல்லாத அளவில் கனமழை பெய்து, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழையால், நகரின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்கள் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக அளவு என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.