வைகையாற்றில் சீறிப்பாய்ந்து வரும் நீர்... கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை

வைகை அணையின் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன. பருவமழை தொடங்கும் முன்னரே தற்போது மழை பெய்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்தது வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது நீர்மட்டம் 62.40அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை, மேலூர், கள்ளந்தரி, பேரணை பகுதி பாசனத்திற்காகவும், மாநகர குடிநீருக்காகவும் 1872 கனஅடிநீர் திறக்கப்பட்டது.

இதனையடுத்து, திருமங்கலம் பகுதிக்கும் தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு 150 கனஅடிநீர் என மொத்தம் 2022 கனஅடிநீர் இன்றுகாலை முதல் திறக்கப்படுகிறது.

இதனால் வைகையாற்றில் நீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. ஆற்றங்கரையோரம் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஆற்றில் துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். ஆற்றை கடக்க பாலங்களை பயன்படுத்த வேண்டும். நீர் அதிகமாக வருவதால் அதில் இறங்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதைப்போன்று முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.80 அடியாக உள்ளது. 730 கனஅடிநீர் வருகிறது. 1400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.75 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.01 அடியாக உள்ளது. 1 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.