தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார்; பிரேமலதா தகவல்

தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்... 2021 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பார்க்கலாம். அவர் நலமாக உள்ளார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளரிடம் கூறியதாவது:

வேல் யாத்திரை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், பொது மக்களுக்கோ, சட்ட ஒழுங்கிற்கோ எந்தவொரு பிரச்னை ஏற்பட்டாலும் அரசாங்கம் தன் கடமையை செய்யும். ஆனாலும் இந்தத் தடை குறித்த விளக்கத்தை தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அரசு அனுமதி மறுத்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையையும் நாம் யோசிக்க வேண்டும் என்றார்.

கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜனவரி முதல் வாரத்திற்குள் தேமுதிக செயற்குழு கூட்டப்பட்டு கூட்டணி குறித்த தெளிவான முடிவை தலைவர் அறிவிப்பார். தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை நலமாக உள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தைப் பார்க்கலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.