மணிப்பூரில் மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ள வன்முறை

மணிப்பூர்: மீண்டும் மோதல்... மெய்தேய் மற்றும் கூகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி வெடித்த மோதல் காரணமாக மணிப்பூரில் இதுவரை 100-க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர்.

35 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்றதன் பேரில் நிலைமை சற்று கட்டுக்குள் வந்தது.

தற்போது மீண்டும் வன்முறை சம்பங்கள் அரங்கேறத் துவங்கி உள்ளன. மேற்கு இம்பால் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் பாதுகாப்புப் படையினர் போல வேடமணிந்து சென்ற ஒரு தரப்பினர், எதிர்க்குழுவைச் சேர்ந்த 3 பேரை சுட்டுக் கொன்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்க எதிர்க்குழுவினர் முயற்சிப்பார்கள் என்பதால் அதைத் தடுக்க ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே, வன்முறை தொடர்பாக சி.பி.ஐ. 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளது. 10 பேர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மணிப்பூரில் கலவரம் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று தகவல்களை சேகரிக்க உள்ளனர்.