தாய்லாந்தில் நாடாளுமன்றம் அருகே கடுமையான மோதல்

தாய்லாந்து நாடாளுமன்றம் அருகே நேற்று கடுமையான மோதல் நிகழ்ந்தது. பேங்காக்கில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர்.

அரசாங்கத்திலும், மன்னராட்சி முறையிலும் சீர்திருத்தம் தேவை என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்வது பற்றி, நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, வெளியே அரசாங்க எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அவர்கள் தாண்டிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியதோடு தண்ணீரையும் பீய்ச்சியடித்தனர்.

அரசாங்க எதிர்ப்பாளர்களும், அரச குடும்ப ஆதரவாளர்களும் சில இடங்களில் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.