அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினியின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக இருப்போம்; தமிழருவி மணியன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ம் ஆண்டு தான் அரசியலில் குதிக்க இருப்பதாகவும் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். அதன் பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர் என்பதும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே அவர் கட்சியை ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கட்சி தொடங்குவது காலதாமதம் ஆனது என்பதும் இருப்பினும் நவம்பர் மாதம் அவர் கட்சி தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் ரஜினிக்கு அரசியல் ஆலோசனைகள் கூறி வருபவர்களில் ஒருவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் அவர்கள் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் ரஜினியின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன்னிறுத்தி ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை விடுவிக்க நாம் ரஜினிகாந்த் அவர்களால் மட்டுமே அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற எதார்த்த நிலையை பூரணமாக உணர்ந்து அவர் முதல்வராக வேண்டும் என்ற ஒரே முடிவுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.

சமய நல்லிணக்கம், மதசார்பற்ற ஆட்சி முறை, ஊழலுக்கு எள்ளளவும் இடம் தராத நேரிய நிர்வாகம், வெறுப்பு அரசியலுக்கு இடமின்றி அனைவரையும் அன்பினால் ஆரத்தழுவி அரவணைக்கும் உயர்பண்பு, சாதி மத உணர்வுகளுக்கு எந்த நிலையிலும் இடம் தராத மேன்மையான வாழ்க்கை முறை ஆகியவை காந்தியத்தின் அடையாளங்கள். இவை காமராஜர் பின்பற்றிய வழித்தடங்கள். காந்தி பிறந்தநாளில் காமராஜர் மறைந்த நாளில் இந்த இருவருடைய கனவை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினி அவர்களின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு தமிழருவி மணியன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.