மதுரை ரயில் விபத்து ..மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல்


இந்தியா: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60க்கும் மேற்பட்டோர் வந்து உள்ளனர். மதுரை ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டருக்கு அருகே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து இதில் இதுவரை 10 பேர் உயிரிழந்து உள்ளனர். தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்து சென்று சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரயில்வே தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதேபோன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மதுரை ரயில் விபத்து சம்பவத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளாதாவது, மதுரையில் ரெயில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணம் யார் என விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ரயில்வே அதிகாரிகள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்துகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.