தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? தொடர்ந்து எழும் கேள்விகள்

பக்கத்து மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு... நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தில் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும், பொது முடக்கத்தால் மக்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்துள்ளனர். வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன, பொது போக்குவரத்தும் இயங்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன்னர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் 21 (இன்று) முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என அறிவித்தது. ஆறு மாதங்களாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு பள்ளி, கல்லூரிகள் விரைவில் வழக்கம் போல் இயங்கும் என்று கூறப்பட்டது.

இதனால் கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால் வழக்கம்போல் வகுப்புகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக கல்வித்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சுரேஷ்குமார், “மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 9, 10,11, 12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் நடக்காது. ஆனால், பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களை போக்குவதற்காக இருப்பார்கள்” என அமைச்சர் கூறினார்.

அதேசமயம் ஆந்திரா, அசாம், ஹரியானா மாநிலங்களில் விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு எப்போது என தொடர்ந்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில் பக்கத்து மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.