மின்சாரம் பாய்ந்து காட்டு யானை பலி; தோட்ட உரிமையாளரை தேடும் வனத்துறையினர்

பர்கூர் மலைப்பகுதியில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பலியானது. இதுதொடர்பாக விவசாய தோட்ட உரிமையாளர் மாதேஷை வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனச் சரகத்தின் ஊசிமலை பாவல்லா தடுப்பணை அருகே வசிப்பவர் மாதேஷ்(50). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், வனவிலங்குகள் உள்ளே வராமல் இருப்பதற்காக, மின்வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த ஆண் யானையின் துதிக்கை மின்சார வேலியில் மோதியதில், மின்சாரம் பாய்ந்த யானை அருகில் உள்ள பாவல்லா தடுப்பணையில் விழுந்து இறந்தது.

இதுகுறித்து பர்கூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக ஊசிமலையைச் சேர்ந்த விவசாய தோட்ட உரிமையாளர் மாதேஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.