அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நிறுத்தமா?

சென்னை: அப்படியா? என்று எழுந்த அதிர்ச்சி... வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், ஆங்கிலவழிக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவில் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில், அதிமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவக்கப்பட்டன.

அங்கன்வாடிகளில் நடத்தப்படும் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தி மேம்படுத்தும் வகையில் இந்த வகுப்புகள் துவங்கப்பட்டன. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.