மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

நாகப்பட்டினம்: நாகை அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ்-ல் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த அகரநீர்மூளை பகுதியைச் சேர்ந்தவர் பாலகுமரன். இவரது மனைவி ரேணுகா. பிரவசத்திற்காக நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி அதிகமாகவே அங்குள்ள மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

வாகனத்தில் ரேணுகாவிற்கு பிரசவ வலி அதிகமாகவே 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பிரியதர்ஷனி ரேணுகாவிற்கு குழந்தை பிறப்பதற்கான மருத்துவ வழிமுறைகளை செய்துள்ளார்.

இதனால் ரேணுகாவிற்கு ஆம்புலன்ஸிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் குழந்தை பிறந்ததை தொடர்ந்து இருவரையும் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தக்க நேரத்தில் பிரசவம் பார்த்து தாய், சேய் இருவரையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் பிரியதர்ஷினி மற்றும் ஓட்டுனர் ராஜசேகரன் ஆகியோரை மருத்துவர்கள் வெகுவாக பாராட்டினர்