B.Ed., படிப்புகளில் சேர நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை; தமிழ்நாட்டில் B.Ed., படிப்புகளில் சேர நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. எனவே அதன்படி, B.Ed., படிப்புகளில் சேருவதற்கு http://tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அக்டோபர் 6-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 12-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., எம்.எட்., மற்றும் பிஎச்.டி., போன்ற படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., சேர்க்கைக்கு தமிழக அரசின் சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படும்.

இதற்கு இடையே, அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதன்படி அதில், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமும், எம்பிசி பிரிவினருக்கு 43 சதவீதமும் பிசி பிரிவினருக்கு 45% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து பி.எட். படிப்பில் சேர விரும்பும் 50 % மதிப்பெண்களை இளங்கலைப் படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை முடிக்காமல், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், பிஎட் படிப்புக்கு தகுதி இல்லாதவர்கள் எனவும் இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.