காதலி வேறு ஒருவருடன் சிரித்து பழகுவதால் வாலிபர் தற்கொலை

மணலி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(வயது 21). இவர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தனது அறைக்குள் வழக்கம் போல தூங்க சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் நடராஜன் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர், கதவை திறந்து பார்த்தனர். அப்போது அறைக்குள் நடராஜன், தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி போலீசார், தூக்கில் தொங்கிய நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவர் நடராஜன், தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண், வேறு ஒரு மாணவரிடம் சிரித்து பேசி பழகி உள்ளார். இதை பார்த்த நடராஜன், நம் காதலி வேறு ஒருவருடன் சிரித்து பழகுவதால் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரித்து வருகின்றனர்.