திருமண வாழ்க்கையில் இணையும் முன் என்னென்ன மாதிரியான பொருத்தங்கள் பார்க்கவேண்டும் தெரியுமா?

ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் தாம்பத்யம் சிறக்கும். நிரந்தரமான நோயாளியை மணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் சேவை வேண்டுமானால் செய்யலாம். குடும்பம் நடத்த முடியாது. அதனால் ஆண்-பெண் இருவரும் நல்ல உடல் மற்றும் மனநலம் கொண்டவராக இருக்க வேண்டும்.
கண்களையும், கருத்தையும் கவரும் பொருளைத்தான் எல்லோரும் தேர்வு செய்வார்கள். அதுபோல் உங்கள் கண்களுக்கும், மனதுக்கும் பிடித்தமான நபரைத் தேர்வு செய்யும்போது, உங்களை அறியாமல் அவர் மீது ஈர்ப்பு ஏற்படவேண்டும். அந்த ஈர்ப்பை உருவாக்குவதற்காக திருணத்துக்கு முன்பும் பின்பும் ஆண்- பெண் இருவரும் தங்களை அலங்கரித்துக்கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். தோற்றம் சரியில்லாவிட்டால் மனதுக்கு சலிப்பு தோன்றிவிடும்.

வாழ்க்கை இனிப்பதற்கு உங்களது துணை, ஏறக்குறைய சமவயது உடையவராக இருக்க வேண்டும். பெண், ஆணைவிட மூன்று முதல் எட்டு வயது வரை இளையவராக இருப்பது ஏற்புடையது. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் அதுவும் வாழ்க்கையில் சலிப்பையே உண்டாக்கும். அதிக வயது இடைவெளி அன்பை குறைத்துவிடும்.ஆண்கள் எப்போதும் அழகான பெண்ணைத்தான் மனைவியாக்கிக்கொள்ள விரும்புவார்கள். அதே சமயம், பெண் நல்ல குணம் கொண்டவளாக இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். அழகோடு, குணமும் அவசியம்.

தொழில், வருமானம் வாழும் இடம், வாழ்க்கைத்தரம் ஆகியவை சமூக அந்தஸ்தை உயர்த்திக்காட்டுபவை. கணவன்-மனைவி இருவரும் இரண்டு விதமான சமூக தளங்களை கொண்டவர்களாக இல்லாமல் இருப்பது நல்லது. இருவருமே உயர்ந்த சமூக நிலையை அடைய முயற்சிப்பவர்களாக இருக்கவேண்டும். வாழ்க்கைக்கு அதுதான் முக்கியம். உங்கள் வாழ்க்கைத்துணை பொருளாதார விஷயத்தில் மிகவும் கவனம் உள்ளவராக இருக்கவேண்டும். இருவரில் யாரேனும் ஒருவர் ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருந்தாலும், குடும்பத்தின் உயர்வு பாதிக்கும்.

தம்பதியர் ஒருமித்த மனநிலை உள்ளவர்களாக இருந்தால்தான் வாழ்க்கையானது எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருக்கும். நடைமுறையில் மாற்றத்தக்க முரண்பாடுகள் இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொள்கிற பக்குவம் இருவரிடத்திலும் இருக்கவேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை தோழமை உணர்வுள்ளவராக இருப்பது அவசியம். இருவரும் உதவும் மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பதும் நல்லது. எல்லா சூழலிலும் உங்களோடு மனம்விட்டுப்பேசக்கூடிய துணை அமையவேண்டும்.