சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணி

13-வது ஐபிஎல் 2020 கிரிக்கெட்டின் 3-வது போட்டி துபாயில் நேற்று நடைபெற்றபோது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் கடந்த தேவ்தத் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். ஆரோன் பிஞ்ச் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். ஆனால் விராட் கோலி 13 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய டி வில்லியரஸ் 30 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.

164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், ஜானி பிரிஸ்டோ களமிறங்கினர். 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அரை சதம் கடந்த பிரிஸ்டோ 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவிச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியாக கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் திணறியது.

களத்தில் சந்தீப் சர்மா, டி நடராஜன் களத்தில் இருந்தனர். 3 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 19.4 ஓவரில் டெயில் ஸ்டெயின் வீசிய பந்தை சந்தீப் சர்மா சிக்ஸ் அடிக்க முயன்று பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த விராட் கோலி கேட்ச் பிடித்தார். இதனால், ஐதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது.