பறவையிடம் பரிவு காட்டிய டோனி மகள் ஷிவா

இந்திய கிரிக்கெட் வீரர் டோனிக்கு 5 வயதில் ஷிவா என்ற மகள் உள்ளார். ஷிவாவுக்கு ‘இன்ஸ்டாகிராம்’ வலைதளத்தில் அதிகாரபூர்வ பக்கம் உள்ளது. இதனை டோனியும், அவரது மனைவி சாக்‌ஷியும் நிர்வகிக்கின்றனர். தற்போது ஷிவா தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எங்கள் வீட்டு புல்வெளியில் ஒரு பறவை நினைவின்றி மயங்கி கிடப்பதை பார்த்தேன்.உடனே எனது அப்பா, அம்மாவை அழைத்தேன். என்னுடைய அப்பா டோனி அந்த பறவையை கையில் எடுத்து கொஞ்சம் தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அது கண் விழித்தது. இதனால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அதை அங்கிருந்த சில இலைகளின் மீது கூடு போன்று அமைத்து உட்கார வைத்தோம். அதன் பெயர் ‘காப்பர்ஸ்மித் பார்பெட்’ (செம்மார்புக் குக்குறுவான் குருவி) என்று எனது தந்தை கூறியதாக தெரிவித்தார். ஆனால் அழகான அந்த சிறிய பறவை திடீரென பறந்து சென்று விட்டதாக கூறினார்.

பின்னர் அவர், அது என்னுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது அதன் அம்மாவிடம் சென்று விட்டதாக என் அம்மா என்னிடம் கூறினார். அந்த பறவையை மீண்டும் பார்ப்பேன் என்று நம்புவதாக கூறினார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.