20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் தலைவிதி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்தது-சச்சின் தெண்டுல்கர்

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த போட்டி அங்கு நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்குமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பதை இறுதிசெய்ய அடுத்த மாதம் வரை காத்திருப்பது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பேட்டி அளித்தபோது, ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் தலைவிதி குறித்து என்னிடம் கேட்டால், அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்தது. திட்டமிட்டபடி போட்டியை நடத்த முடியுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்துவது நன்றாக இருக்காது எனவும், கேலரியில் ரசிகர்களை பார்க்கும் போதெல்லாமல் அதுவே சில நேரம் உங்களுக்குள் உத்வேகத்தை கொண்டு வரும். 25 சதவீதம் அளவுக்கு ரசிகர்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் சச்சின் கூறினார்.

மேலும் அவர், இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் படிப்படியாக மற்ற நாடுகளும் கிரிக்கெட் விளையாட தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.