ஹர்திக் பாண்ட்யா - நடாஷா ஸ்டான்கோவிச் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறப்பு

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவும், செர்பியா நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சும் காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டையொட்டி, இருவரும் வெளிநாட்டில் நடுக்கடலில் வைத்து மோதிரம் மாற்றிகாதலை வெளிப்படுத்தினர். அதன்பின் நடாஷா 5 மாத கர்ப்பிணியாக இருந்ததை ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார். அதன்பின் லாக்டவுன் காலத்தில் அவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

இவர்களது திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அதன்பின் இவர்களது திருமண புகைப்படம் வெளியானபோது தான் இவர்களது திருமணம் குறித்த செய்தி வெளி உலகத்திற்கு தெரியவந்தது.

அதன்பின், கடந்த ஒருமாதமாக தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளங்களில் ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டு வந்த நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். இன்று மதியம் 3.45 மணியளவில் நடாஷாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.