என்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை - முகமது அசாருதீன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு கடந்த 2000-ம் ஆண்டு மேட்ச் பிக்சங் குற்றச்சாட்டில் பிசிசிஐ-யால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதன்பின் இந்த தடை நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது. பின்னர் அசாருதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள அசாருதீன் பேட்டி அளித்தபோது, தனக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார். நடந்த சம்பவங்கள் குறித்து நான் யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை. என்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியாது என தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுகள் கழித்து இதில் இருந்து விடுபட்டது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் நான் மிகவும் திருப்தி அடைந்தேன். பிசிசிஐ ஏஜிஎம் கூட்டத்தில் கூட கலந்து கொண்டேன். நான் 16 முதல் 17 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி உள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் கேப்டனாக செயல்பட்டுள்ளேன் என அசாருதீன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கிரிக்கெட் பயணம் எனக்கு திருப்தி அளித்தது. 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளேன். 99-வது டெஸ்ட் போட்டிதான் கடைசி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியவில்லை என கவலை அடையவில்லை என்று கூறினார்.