குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் இந்திய, ஆஸ்திரேலிய அணிக்கு அபராதம்

லண்டன்: நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலிய அணிக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.

லண்டன் ஓவலில் நடந்த 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாமல் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டன. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 5 ஓவர்கள் வீசவில்லை. அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் 4 ஓவர்கள் வீசவில்லை.

கள நடுவர்கள் அளித்த அறிக்கையை அடுத்து, ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலிய அணிக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதம் விதித்தார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் வீரர்களின் நடத்தை விதிகளை மீறியதற்காக அவரது போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளி தண்டனையாகவும் விதிக்கப்பட்டது.

2-வது இன்னிங்சில் சுப்மன் கில் 18 ரன்னில் ஸ்காட் போலன்ட் பந்து வீச்சில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கேமரூன் கிரீன் கையை தரையில் உரசியபடி பிடித்த இந்த சர்ச்சைக்குரிய கேட்ச் சரியானது தான் என்று அறிவித்த 3-வது நடுவரின் முடிவு குறித்து சமூக வலைதளத்தில் சுப்மன் கில் விமர்சனம் செய்ததால் தண்டனைக்குள்ளாகி இருக்கிறார்.