ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 தொடங்க உள்ளதாக தகவல்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது.

ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும், துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஐபிஎல்போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் போட்டி மொத்தம் 51 நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 19 தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி நடைபெறும். இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.