பெங்களூர் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் ஸ்மித், படலர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

தொடக்கத்தில் இருந்தே பட்லர் வாணவேடிக்கை நிகழ்ந்த தொடங்கினார். ஆட்டத்தின் 3-வது ஓவரில் ஸ்மித் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பட்லரும் வெளியேறினார். அவர் 12 பந்தில் 22 ரன்கள் அடித்தார். அதற்கு அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று நட்சத்திர வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

ராபின் உத்தப்பா 17 ரன்னில் வெளியேறினார். ஆனால் இளம் வீரரான லாம்ரோர் சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார். 39 பந்தில் 47 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். டெவாட்டியா, ஜாஃப்ரா ஆர்சர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் 150 ரன்களை கடந்ததது.

கடைசி ஓவரில் டெவாட்டியா இரண்டு சிக்சர்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. டெவாட்டியா 12 பந்தில் 24 ரன்களும், ஜாஃப்ரா ஆர்சர் 10 பந்தில் 16 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ஆர்சிபி சார்பில் சாஹல் 3 விக்கெட்டும், உடானா 2 விக்கெட்டும், சைனி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.