ரோகித் சர்மா திடீரென்று களம் இறங்கியதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஐதராபாத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோகித் சர்மா திடீரென களம் இறங்கினார்.

அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் 14 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளேஅப் சுற்றை உறுதி செய்தது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் கடந்த 4 ஆட்டங்களில் விளையாடவில்லை. இதனால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

காயம் காரணமாக அவர் தேர்வு செய்யப்படவில்லை எனவும், உடற்தகுதி நிரூபிக்கும் பட்சத்தில் மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அணி அறிவிக்கப்பட்ட சமயத்தில் ரோகித் சர்மா வலைபயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டது பெரும சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஐதராபாத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோகித் சர்மா திடீரென களம் இறங்கினார். ஆனால் இந்த ஆட்டத்தில் அவர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.