சாம்கரண் எங்கள் அணியின் முழுமையான கிரிக்கெட் வீரர் - கேப்டன் டோனி

துபாயில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சென்னை அணி தனது 3-வது வெற்றியை பெற்றது. இதில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ஏற்கனவே ஐதராபாத்திடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. இந்த வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறுகையில், நெருங்கி வந்து இந்த வெற்றியை பெற்றுள்ளது சிறப்பானது. பேட்ஸ்மேன்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். இந்த ஆடுகளத்தில் 168 ரன் இலக்கு போதுமானதா என்பது முதல் 6 ஓவரை பொறுத்துதான் இருக்கிறது. எங்களது வேகப்பந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசினார்கள் என தெரிவித்தார்.

மேலும் அவர், சுழற்பந்து வீரர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். எங்களுக்கு எதிராக ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடமாட்டார்கள் என்றுதான் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரரை பயன்படுத்தினோம். சாம்கரண் எங்கள் அணியின் முழுமையான கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார் என கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி தொடர்ந்து நீடித்தால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பெற முடியும். சென்னை அணி 9-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை வருகிற 17-ந் தேதி சார்ஜாவில் சந்திக்க உள்ளது. ஐதராபாத் அணி அடுத்த போட்டியில் கொல்கத்தாவை 18-ந் தேதி எதிர்கொள்ளவுள்ளது.