சச்சின் தெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான தீர்ப்பு அளித்ததை ஒப்புக் கொண்ட ஸ்டீவ் பக்னர்

சர்வதேச கிரிக்கெட்டில் தலைச்சிறந்த நடுவர்களில் ஒருவராக ஸ்டீவ் பக்னர் இருந்து வந்தார். ஆனால் கடைசி கட்டத்தில் சில தவறான தீர்ப்புகளை வழங்கி சர்ச்சையில் மாட்டி கொண்டார். இவர் இதுவரை 128 டெஸ்ட் மற்றும் 181 ஒரு நாள் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார். இதில் 5 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டதும் அடங்கும்.

தற்போது 74 வயதான ஸ்டீவ் பக்னர், 2009-ம் ஆண்டு நடுவர் பணியில் இருந்து ஒதுங்கினார். இந்நிலையில் அவர் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான தீர்ப்பு அளித்ததை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர், தெண்டுல்கருக்கு இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் நான் தவறுதலாக அவுட் கொடுத்திருக்கிறேன். எந்த நடுவரும் வேண்டுமென்றே தவறு செய்வது கிடையாது என்று கூறினார்.

2003-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கில்லெஸ்பியின் பந்து வீச்சில் தெண்டுல்கருக்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்ததாகவும், பிறகு பந்து ஸ்டம்புக்கு மேலாக சென்றபோது, தான் தவறிழைத்ததை உணர்ந்ததாகவும் கூறினார். மேலும், இதே போல் 2005-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அப்துல் ரசாக் வீசிய பந்தில் தெண்டுல்கர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக விரலை உயர்த்தினேன். ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது. ஈடன்கார்டனில் அதுவும் இந்தியா பேட்டிங் செய்யும் போது ரசிகர்களின் கரவொலியில் எதுவும் சரியாக கேட்காது. த்தகைய தவறுகளால் நான் வேதனைக்கு உள்ளானேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், நான் ஒரு பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்கி அது தவறான தீர்ப்பு என்று உணர்ந்தால் அன்றைய இரவில் சரியாக தூக்கம் வராது. அந்த நினைப்பால் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும். ஆனால் தற்போது அந்த தொந்தரவுகள் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.